தெலங்கானா விடுதியில் தாய், மகன் தீக்குளித்து தற்கொலை: டி.ஆர்.எஸ் கட்சியினர் 6 பேர் கைது!

தெலங்கானா மாநிலம் கமரெட்டி என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் கங்கம் சந்தோஷ். இவரும் இவரின் தாயார் பத்மாவும் கடந்த 16-ம் தேதி அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சந்தோஷ் தங்களது தற்கொலைக்கு டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் 6 பேர், இன்ஸ்பெக்டர் நாகார்ஜுனா ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களின் தொடர் துன்புறுத்தல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாக வீடியோவில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதோடு தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதிலும், “7 பேரும் சேர்ந்து தன்னை தொழில் செய்யவிடாமல் தடுத்ததாகவும், இதனால் தான் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாகவும், நாங்கள் இறந்த பிறகாவது எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த வீடியோவின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ரமயம் பேட் நகராட்சி கவுன்சில் தலைவர் ஜிதேந்தர் கவுட் உட்பட 7 பேர் மீதும் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் 7 பேரையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இருவர் தற்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சந்தோஷுக்கு எந்த மாதிரியான இன்னல்களை கொடுத்தனர் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.