திருமணமான 15 நாள்களில் புதுமாப்பிள்ளை வெட்டி கொலை‌! – சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்துள்ளது.

காவல் நிலையம்

இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஏர்போர்ட் நகர்ப்பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் சென்றுள்ளார். அவரின் நண்பர்கள் கார்த்திக், வினோத் கண்ணன், குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டி உள்ளது. இதை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

ஆயுதங்கள்

அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், படுகாயமைடந்தவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். வெட்டுப்பட்ட கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளான ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “பிறந்தநாள் விழாவுக்கு பிரபாகரன் தரப்பு மது அருந்தியபோது, அப்பகுதியில் ஜம்புலியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் தரப்பும் மது அருந்தியுள்ளனர். பிறந்தநாள் விழா கொண்டாடியவர்கள் அதிக கூச்சலிட்டுள்ளனர். இதை மற்றொரு தரப்பு கண்டிக்கவே இருதரப்புக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஆகியுள்ளது. ராஜ்குமார் தரப்பினர், இங்கேயே இருங்கடா ஆளைக் கூட்டிட்டு வரேன் எனக் கூறிச் சென்றுள்ளனர்.

குற்றவாளிகள்

இதையடுத்து பிரபாகரன் தரப்பினர் அதேபகுதியில் உள்ள ஒரு பேக்கரிகடையின் மாடியில் உள்ள அறையில் படுக்கச் சென்றுவிட்டனர். அப்போது பிரபாகரன், ராஜ்குமாருக்கு போன் செய்து, `என்னடா ஆளைக் கூட்டிட்டு வரேனு சொன்ன, வாடா நாங்க இங்க தான் இருக்கோம்’ எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரின் நண்பர்கள் சிரிதர், ரஞ்தித், மதன்குமார், ராஜேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பிரபாகரனைத் தேடி வந்துள்ளனர்.

பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை எழுப்பி பிரபாகரனை வெட்டியுள்ளனர். கார்த்திக், வினோத்குமார் அவர்களை தடுக்க முயன்றபோது அவர்களையும் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் தப்பிக்க முயலவில்லை என்பதால் எளிதில் அவர்களை பிடித்துவிட்டோம் என்றனர்.

பாராட்டு

குற்றவாளிகளை விரைந்து பிடித்ததற்கு திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார், தாலுகா போலீஸாரைப் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.