திருப்பதி என்றால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் லட்டுதான். பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம், சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசம், மதுரை அழகர் கோயில் தோசை என ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பிரசாதம் பிரபலமானது என்றாலும், திருப்பதி லட்டுக்கு உலக அளவில் எப்போதும் தனி மவுசு உண்டு.
இதனை கருத்தில் கொண்டே, இலவச தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் அதனை பணம் செலுத்தி வாங்கி கொள்ளும் வசதி இதுநாள்வரை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. திருப்பதியில் லட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு இரண்டு என்ற வீதத்தில் மட்டுமே இனி லட்டு வழங்கப்படும் என்று
திருமலை திருப்பதி
தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த சனிக்கிழமை
திருப்பதி தேவஸ்தானம்
சார்பி்ல் சென்னையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தையொட்டி, பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்சணக்கமான லட்டுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன.
இவ்விரு காரணங்களால் லட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க லட்டு விநியோகத்தில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.