மலையக மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாக இலக்குடன் செயல்படுவதாக தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சர் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,இவ்வாறு குறிப்பிட்ட அவர், இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதனை மதிக்கிறேன் என்றும்கூறினார்.
1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது தலைவர் அமரர் சந்திரசேகரன் கண்ட கனவை நனவாக்கும் பொருட்டு அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு அமைச்சு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அமைச்சின் கடப்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கிறேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
முழு மலையகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மலையக மக்களுக்கான அமைச்சின் பொறுப்பை என்னிடத்தில் வழங்கியுள்ளார். இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நாடு இன்று பெரும் நெருக்கடி நிலையினை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையிலேயே என்னிடத்தில் அமைச்சுப்பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நான் எமது மக்களுக்கான தேவைகளை முன்னிலைப்படுத்தியே சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்தார்