வலிமையான நாடு என கருதப்படும் ரஷ்யா எளிதாக உக்ரைனை வென்றுவிடலாம் என்று எண்ணி உக்ரைனுக்குள் ஊடுருவ, எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக் காட்டியது உக்ரைன்.
ஏராளம் படைவீரர்கள், போர் வாகனங்கள், முக்கிய தளபதிகள் என கடும் இழப்பைச் சந்தித்தது ரஷ்யா.
அது வெறும் இழப்பு மட்டுமல்ல, தான் ஒரு வலிமையான நாடு, பெரிய நாடு என்ற திமிரில் ஆணவமாக போரைத் துவக்கிய ரஷ்யாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானமே பரிசாகக் கிடைத்தது.
ஆக, தன்மானப் பிரச்சினையாகிவிட்ட உக்ரைன் போரை எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறது ரஷ்யா.
இந்நிலையில், புடினுடைய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும், தற்போது ஒரு உக்ரைனில் ஒரு உக்ரைன் வீரர் இருந்தால், ரஷ்ய தரப்பில் அந்த ஒரு வீரரை எதிர்க்க மூன்று ரஷ்யப் படையினர் இருப்பதாகவும் மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் கணித்துள்ளார்கள்.
எனவே, உக்ரைனால் ரஷ்யா அவமானப்படுத்தப்பட்டு வருவது உண்மைதான் என்றாலும், அவர்கள் போரில் வெற்றி பெறும் நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள் என மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ரஷ்யா அவமானத்துக்குரிய வகையில் உக்ரைன் வீரர்களால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமையை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றியுள்ளார், ‘கசாப்புக்கடைக்காரர்’ என வர்ணிக்கப்படும் ரஷ்ய தளபதி ஒருவர்.
15 நாட்களுக்கு முன் உக்ரைன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் Aleksandr Dvornikov என்னும் அந்த தளபதிதான் போர் யுக்தியையே மாற்றி புடினுடைய வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் என மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.
ஆக, உக்ரைன் ரஷ்யப் போரில் புதிய அத்தியாயம் ஒன்று துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், முன்பு தோல்விகளை சந்தித்தாலும், புடின் தற்போது வெல்லும் நிலையில்தான் உள்ளார் என்கிறார்கள்.
Kyivஐக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த ரஷ்யப் படைகள் தற்போது டான்பாஸ் பகுதியைக் குறிவைத்து தாக்கி வருவதாகவும், பெரிய பகுதிகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், சிறு சிறு பகுதிகளாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மே மாதம் 9ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரில் நாஸிக்களை வென்றதைக் கொண்டாட இருக்கும் ரஷ்யப் படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட இருக்கும் புடின், ரஷ்யப் படைகள் உக்ரைனில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மாஸ்கோவில் தனது வெற்றி விழா பேரணியின் முன் நிற்க விரும்பமாட்டார்.
ஆகவேதான், அதற்கு முன்பு டான்பாஸ் பகுதியையாவது கைப்பற்றிவிடவேண்டும் என்ற முடிவுடன் ரஷ்யப் படைகள் அப்பகுதியைக் குறிவைத்து வருகின்றன என்கிறார் மேற்கத்திய நாடுகளின் அலுவலர் ஒருவர்.