சேலம் மாவட்டத்தில் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், எடப்பாடி, ஓமலூர் என பல்வேறு பகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இங்கிருந்து வெள்ளி கொலுசுகளை ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநில வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெள்ளி தொழில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் நிலை குறைந்துள்ளதால், கடந்த மாதத்தை விட வெள்ளி கொலுசுகளின் ஆர்டர்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெள்ளி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டினை விட விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் வியாபாரம் அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தெரிவித்திருப்பதாவது,
கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட வெள்ளி தொழிலில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வருகின்ற 3-ந் தேதி அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெள்ளி கொலுசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நாங்கள் வெள்ளி தொழிலை செய்வதற்கு ஆவலுடன் உள்ளோம். இதனை நம்பி உள்ள தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்”.என்று கைவினை சங்க தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தெரிவித்துள்ளார்.