பசுமைத் தமிழகம் திட்டம்: ஓசூரில் வனப்பரப்பளவை அதிகரிக்க 7 லட்சம் மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் இங்குள்ள வனச்சரகங்களின் வனப்பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1,501ச.கி.மீ.ஆகும். இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அடங்கியுள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட காப்புக்காடுகளில், 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272வகையான பறவை இனங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில், பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 22 சதவீதமாக உள்ள வனப்பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நடப்பு சட்டபேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஓசூர் வனக்கோட்டத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து வனப்பரப்பளவை அதிகரிக்கும் பணியை மேற்கொள்ள வனச்சரகர்களுக்கு மாவட்ட வன அலுவலரும், வனஉயிரின காப்பாளருமான க.கார்த்திகேயனி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இங்குள்ள 7 வனச்சரகங்களிலும் தலா ஒருலட்சம் மரக்கன்றுகள் என மொத்தம் 7லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் வனச்சரகர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது, “உரிகம் வனச்சரகத்தில் 1லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதில் அரசு, ஆலம், அத்தி, புளி, புங்கன், ஈட்டி, சந்தனம், வேம்பு, நாவல், மலைவேம்பு உள்ளிட்ட 20 வகையான சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய தேவையான இயற்கை உரம், வண்டல்மண் மற்றும் நாற்றுகளை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகளும், உரிகம் வனச்சரகத்தில் உள்ள அடர்த்தி குறைந்த காடுகள், அரசு நிலங்கள் உள்ளிட்ட பசுமை குறைந்த பகுதிகளில் நடவு செய்யப்பட்டு அடர்த்தி மிகுந்த காடுகள் உருவாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.