ரூ.1.87 கோடி வரி பாக்கி: இளையராஜாவுக்கு இறுதி 'நோட்டீஸ்'

சென்னை : சேவை வரி நிலுவைத் தொகை 1.87 கோடி ரூபாய் செலுத்துமாறு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இது குறித்து, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தன் பாடல்களுக்கான காப்புரிமை வாயிலாக, பல கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார். ஆனால், அதற்கான சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. குறிப்பாக, 2013 – 14ம் நிதியாண்டுக்கான வரி செலுத்தவில்லை என்றும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், புலனாய்வுத் துறை தலைமை இயக்குனர், பிப்ரவரி 28ல், இளையராஜாவுக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ளார். அதில், 'சேவை வரி செலுத்தாததால் விசாரணைக்காக, மார்ச் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆஜராக வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. ஆனால், இளையராஜா ஆஜராகவில்லை.

அதைத் தொடர்ந்து, மார்ச் 28ல் ஆஜராகும்படி, புலனாய்வுத் துறை, மீண்டும் சம்மன் அனுப்பியது; அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதே போல, மூன்று முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. ஆனால், 2013 – 14ம் நிதியாண்டின் அவரது கணக்கை ஆய்வு செய்ததில், அவர் சேவை வரி செலுத்த வேண்டும் என்பதும், தற்போது வரை, 1.87 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது என்றும், ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு, அவருக்கு இறுதி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.