இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சராக, பிலாவல் புட்டோ சர்தாரி நேற்று பதவி ஏற்றார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவிஇழந்தார்.
சந்திப்பு
இதையடுத்து பாகிஸ் தான் முஸ்லிம் லீக் – நவாஸ் பிரிவு மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து, ஆட்சி அமைத்தன. பாக்., முஸ்லிம் லீக் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார்.கடந்த வாரம் ஷெபாஸ் ஷெரீப்பின் அமைச்சரவையும் பதவி ஏற்றது. எனினும், அப்போது பாக்., மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ சர்தாரி, 33, பதவி ஏற்கவில்லை.அவர், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்று, பாக்., முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். முதன்முறைஇந்நிலையில், பாகிஸ்தான் திரும்பிய பிலாவல் புட்டோ, நாட்டின்வெளியுறவுத் துறை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அதிபர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், அவருக்கு பாக்., அதிபர் ஆரிப் அல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிகழ்வில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் அதிபரும், பிலாவல் புட்டோவின் தந்தையுமான ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2018ல், பாக்., பார்லிமென்டிற்கு தேர்வான பிலாவல் புட்டோ, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.’மாஜி’ பிரதமர் கெஞ்சினார்பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் துணை தலைவர் மரியம் நவாஸ், நேற்று கூறியதாவது:பாகிஸ்தானின் ௭௫வது ஆண்டு கால வரலாற்றில், பாதிக்கு மேல் ராணுவம் தான் ஆட்சி செய்துள்ளது.
வெளியுறவு கொள்கை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் தலையிட, ராணுவம் மறுத்துவிட்டது. தன் அரசு கவிழ்வதை தடுக்க கடைசி முயற்சியாக, ராணுவத்திடம் கெஞ்சினார் இம்ரான் கான்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தன்னை ஆதரிக்க, முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான ஆசிப் அலி சர்தாரி காலிலும் இம்ரான் விழுந்தார். எதுவும் பலனளிக்கவில்லை என்பதால் தான், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால், அவரால் எதிலும் வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.