இன்று தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு இத்துறை சார்ந்த அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, பல்வேறு வகையான புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
கேள்வி நேரங்களின் போது, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “மகளிர் சுய உதவி குழுக்கள், வறுமையை போக்குவதில் முக்கிய பங்கு வகிகின்றனர். ஏனென்றால் பெண்களுடைய வருமானம் என்பது குடும்பத்தினருடைய பாதுகாப்பு, உடல்நலம், குழந்தைகளின் கல்வி என முற்றிலும் குடும்பத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆண்களின் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் கடாயில் தான் செலவழிக்கப்படும்”. என்றார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு அவர், ‘நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை’, என்றார். இருப்பினும் சட்ட பேரவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சட்ட பேரவை தலைவர் தலையிட்டு அனைவரும் அமைதியாக இருக்கும்படி தெரிவித்தார். மேலும், “மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்கிற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யமுடியுமா? என்று கேட்கிறீர்கள், இதனை மட்டும் கேளுங்கள்” என்று தெரிவித்தார்.