உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்த பிரித்தானிய வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பிரித்தானிய முன்னாள் வீரர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெளியாகும் தகவல் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
36 வயதான Scott Sibley என்பவரே ரஷ்ய துருப்புகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான Scott Sibley துணிச்சல் மிகுந்த போர் வீரர் என்றே அவரது முன்னாள் சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உக்ரைனில் போர் முகத்திற்கு பயணப்பட்ட இன்னொரு பிரித்தானிய இராணுவ வீரரும் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Scott Sibley உக்ரைனில் மரணமடைந்துள்ள விவகாரம் பிரித்தானிய அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரித்தானிய வீரர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.
மரணமடைந்த வீரர் Scott Sibley தொடர்பில் அவரது மனைவி விக்டோரியா சமூக ஊடக பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி, முன்னர் பிரித்தானிய கமாண்டோ பிரிவில் Scott Sibley பணியாற்றியிருந்ததால், முன்னாள் சக வீரரை உக்ரைனில் இழந்துள்ளதாக அவர்களின் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, மரியுப்போல் நகரில் இரும்பு தொழிற்சாலையில் மட்டும் 20கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் நிலை தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.