உலர் கழிவுகளை எரியூட்டும் ஆலையின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு.!

உலர்க்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் நடமாடும் எரியூட்டும் ஆலையின் செயல்பாட்டினை அமைச்சர் திரு.கே.என்.நேரு சென்னையில் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

உலர்க்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் நடமாடும் எரியூட்டும் ஆலையின் (Mobile Incinerator Plant) செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  

திரு.உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக திடக்கழிவுகள் நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரிக்கப்பட்டு பெறப்படுகிறது.

மேலும், குப்பைத் தொட்டிகள் மூலமாகவும் சேகரிக்கப்பட்டு அவையும் தரம் பிரிக்கப்பட்டு ஈரக்கழிவுகள் உரமாகவும், எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் உலர்க்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் வகையில் திருவாளர்கள் ரெனால்ட்டு நிசான் டெக்னாலாஜிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எக்கோ லைஃப் கிரீன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் நடமாடும் எரியூட்டும் ஆலை (Mobile Incinerator Plant) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நடமாடும் எரியூட்டும் ஆலையின் செயல்பாட்டினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். 

இந்த நடமாடும் எரியூட்டும் ஆலை நாளொன்றுக்கு சுமார் 5 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகளை எரியூட்டும் திறன் கொண்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருமளவு திடக்கழிவுகள் உற்பத்தியாகும் இடங்கள் குறிப்பாக நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெற்ற இடங்களில் இந்த நடமாடும் எரியூட்டும் ஆலையினை நிறுவி அங்குள்ள பிளாஸ்டிக் மற்றும் உலர்க்கழிவுகள் எரியூட்டப்படும்.  

அதனைத் தொடர்ந்து, சிங்கார சென்னை 2.O வீதிவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு முன்னிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 

சென்னையில் நடைப்பயிற்சி, ஓடுதல் பயிற்சி மற்றும் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க சிங்கார சென்னை 2.O வீதி விழாப் போட்டி பெருநகர சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இந்திய அளவில் பிரீடம்2வாக், ரன் மற்றும் சைக்கிள் சவால் என்ற தலைப்பில் இத்தகைய போட்டிகள் அறிவித்து நடத்தப்பட்டது.  

இதில் சென்னையும் பங்கேற்றது. சென்னையில் சைக்கிள் ஓட்டுவதற்கு 1,059 நபர்கள் பதிவு செய்தார்கள். இது இந்திய அளவில் அதிகபட்ச பதிவுகள் ஆகும். சென்னை சைக்கிள் சவாலில் 72,458 கி.மீ. பதிவு செய்து சைக்கிள் சவாலை வென்றது.

மேலும், நடைப்பயிற்சி சவாலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. 

இப்போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு நிலைகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சென்னை மாநகரத்தைச் சார்ந்த 30 வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மேயர் திருமதி ஆர்.பிரியா, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.