பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன்கூடு கிராமத்தை சேர்ந்த நாகராஜூசிக்க தேவம்மா தம்பதியரின் மகள் பாக்யா(வயது12). அதே பகுதியைச் சேர்ந்த ராஜாகவுரம்மா தம்பதியரின் மகள் காவ்யா(7). இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் மற்ற குழந்தைகளுடன் ஹனுமந்தநாயக்கா என்பவரது ஐஸ்கிரீம் பார்லர் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் கண்ணாமூச்சி விளையாடினார்கள். மற்றவர்கள் தங்களை பார்க்க கூடாது என்பதற்காக குழந்தைகள் இருவரும் ஐஸ்கிரீம் பார்லருக்குள்ளே இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் மறைந்திருந்தனர். எதிர்பாராதவிதமாக அந்த பெட்டி பூட்டிக்கொண்டது.
அதில் இருந்து வெளியே வர முடியாமல் குழந்தைகள் 2 பேரும் தவித்தனர். பெட்டிக்குள் இருந்து குழந்தைகள் சத்தம்போட்டது யாருக்கும் கேட்கவில்லை. இதனிடையே விளையாட சென்ற குழந்தைகள் பாக்யா, காவ்யாவை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் தேடினார்கள்.
இறுதியாக ஐஸ்கிரீம் பெட்டியை திறந்து பார்த்தபோது அங்கு மூச்சு திணறி இறந்த நிலையில் அவர்களை பிணமாகவே மீட்க முடிந்தது. குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் நஞ்சன்கூடு கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.