எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் டவர் 1,2,3 ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் அதிநவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க நிர்வாகிகள் தீ விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்தனர்” என்றார்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்துப் பேசினார். அப்போது அவர், “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் பிரிவில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது.10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால்தான், நரம்பியல் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டது. தி.மு.க அரசின் துரித நடவடிக்கையால்தான் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அங்கிருக்கும் டவர் 1, 2, 3 ஆகிய கட்டடங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது சில உண்மை நிலவரங்களை தெரிந்துகொண்டு பேசுவது அவசியமானது. அந்த கட்டடங்களை கட்டியது கலைஞர். அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை என்று பெயர் சூட்டியதும் கலைஞர்தான். ஆனால் ஒயிட் வாஷ் செய்து, பெயிண்ட் அடித்துவிட்டு திறந்து வைத்தது மட்டுமே அ.தி.மு.க. ஆனால் அதை நாங்கள் கட்டினோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது அபத்தம்” என்றார்.