குறுகிய கால தாக்குதலுக்கு விமானப்படை தயார்நிலை: தளபதி சவுதாரி விருப்பம்

புதுடெல்லி: ‘குறுகிய மற்றும் சிறிய கால தாக்குதல்களுக்கு விமான படையை தயார்படுத்த வேண்டும்,’ என்று இந்திய விமானப்படையின் தளபதி வி.ஆர்.சவுதாரி கூறினார். உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர், 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுதாரி கலந்து கொண்டு பேசியதாவது: நமது சக்தி, இடம் மற்றும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப குறுகிய, வேகமான போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், கிழக்கு லடாக்கில் நாம் இப்போது பார்ப்பது போன்ற நீண்ட கால மோதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய புவிசார்-அரசியல் சூழ்நிலையானது, இந்திய விமானப்படையை குறுகிய மற்றும் சிறிய கால நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நமது படை மிகவும் பரந்த மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட தளவாடங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய அதிக தீவிரம் கொண்ட, குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தளவாடங்களை கையாளும் விதத்தில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.  இதற்காக விமான படை தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.