திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 7 வயது சிறுமிக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஷிகெல்லா வைரஸ் நோய் பொதுவாக அசுத்தமான குடிநீர் மூலம் தான் பரவுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவை தான் இந்த நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு எரஞ்சிக்கல் பகுதியில் ஷிகெல்லா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு இருந்ததால் சிறுமியின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சிறுமிக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியது தெரியவந்து உள்ளது. இதையடுத்து எரஞ்சிக்கல் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.இதற்கிடையே வைரஸ் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து சிறுவனை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த சிறுவனின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ேபரின் உடல் நிலையும் திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். ஷிகெல்லா வைரஸ் பரவாமல் இருக்க எரஞ்சிக்கல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணறுகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பரிசோதனையும் நடத்தி வருகின்றனர்.