தஞ்சை மாவட்டம், விஷ்ணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 32). இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ஸ்ரீதேவியின் தந்தை முருகேசன், இருவரிடமும் சமாதானம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முருகேசன், பாக்கியராஜ் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அரிவாளை எடுத்து முருகேசனை சரமாரியாக வெட்டினார். தடுக்க முயன்ற ஸ்ரீதேவியை கீழே தள்ளி விட்டார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முருகேசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பூதலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் லதா, துணை காவல் ஆய்வாளர் ஜெகஜீவன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், பாக்கியராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.