தண்டந்தோட்டம் பாரிவேட்டைத் திருவிழா: சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந்தோட்டம் கிராமம் உள்ளது. பொதுவாக எல்லா ஊர்களிலும் எல்லைச் சாமியான ஐயனார் ஊரின் வெளியே இருந்து காவல் காப்பார். சிவாலயமோ, பெருமாள் கோயிலோ அது ஊரின் மையமாக அமைந்திருக்கும். ஆனால் இவ்வூரில் அகஸ்திய மகரிஷிக்குக் காட்சி தந்த சிவகாமசுந்தரி சமேத நடனபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் ஊரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது. 

முத்துவேலாயுதசுவாமி சந்நிதியும், தர்ம சாஸ்தா சந்நிதியும் அமைந்த ஐயனார் கோயில் ஊரின் பிரதான கோயிலாகத் திகழ்கிறது. மிகவும் சிறப்புவாய்ந்த முத்துவேலாயுதசுவாமி கோயிலில் பல்லாண்டுகளாக, பாரம்பர்யமாக ஆண்டுதோறும் 10 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.

தண்டந்தோட்டம் பாரிவேட்டைத் திருவிழா

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பாரிவேட்டை நேற்று (27.4.2022) நடைபெற்றது. சுவாமி, அம்பாள், ஐயனார், வேலாயுதசுவாமி ஆகிய திருமேனிகளைக் குதிரை வாகனத்தின் மீது அலங்கரித்து அதைத் தோளில் சுமந்துக்கொண்டு இளைஞர் குழாம் ஊருக்கு வெளியே சுமந்து சென்று வழிபட்டனர்.

அப்பகுதி மக்கள் வாண வேடிக்கைகளுடன் வரவேற்று, அதிகமான மாலைகளை இறைவனுக்கு சாத்தி வழிபட்டனர். அதன்பின் மங்கல வாத்தியங்கள் முழங்க, இஸ்லாமியர் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டு சுவாமியுடன் வீதிகளை வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தண்டந்தோட்டம் பாரிவேட்டைத் திருவிழா

இந்தக் கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களிலும், அயல்நாடுகளிலும் வசிக்கும் குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். வேளாண்மையை பிரதானமாகக் கொண்ட அனைத்து சமூகத்தினரும் நாள் முழுவதும் கோயில் வேலைகளைத் தமது வீட்டு வேலைகளைப் போலக் கருதிப் பங்காற்றினர். கோடையின் தாகம் தணிக்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நீர்மோர், பானகம், குடிநீர் ஆகியன தானம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.