தமிழ் தெரியாமல் பணியாற்றும் பிறமாநில டாக்டர்கள்… விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், தமிழ் தாய்மொழி அல்லாத பிற மாநிலத்தவர் பலர், பல ஆண்டுகளாக துறை தலைவர்களாகவும், இணை பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணியாற்றி வரும் நிலையில், இதுவரை அவர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ளாமலும், தமிழ்நாடு தேர்வாணையத்தின் 2ஆம் நிலை தமிழ்த் தேர்வில் வெற்றி பெறாமலும், மக்களின் உடல் நலத்துடன் தொடர்புடைய துறையில் பணியாற்றுவதை வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்களைப்பற்றி அறிந்துகொள்வதில் மொழி புரியாத மருத்துவர்கள் சிரமப்படுவதால், பொதுமக்களும் தொடர்ச்சியாக இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள். சில நேரங்களில் நோயாளிகளுக்கு தவறான மருத்துவம் அளிக்க நேர்கின்றதால் குழப்பங்களும் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்புடைய இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் தமிழ் கற்காமல் பணியாற்றும் தகுதியற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு  சீமான் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.