பெங்களூரு:கொரோனா நான்காவது அலையில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற பீதியால், பள்ளி, கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த பெற்றோர் தயங்குகின்றனர். மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
பாக்கியுள்ள கட்டணத்தை செலுத்தும்படி, சில பள்ளிகள் நெருக்கடி கொடுக்கின்றன. பள்ளிகளை மே 16ல் திறக்க, கர்நாடக கல்வித்துறை தயாராகி வருகிறது. இந்நிலையில் நாட்டில் நான்காவது அலை பீதி எழுந்துள்ளது.
ஜூன் இறுதி வாரம், நான்காவது அலை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா, வேண்டாமா என பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தொற்று அதிகரித்தால் பள்ளி, கல்லுாரிகளை மூடி, ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடக்கக்கூடும். கட்டணம் செலுத்தினால் வீணாகும் என, பெற்றோர் கருதுகின்றனர்.
இதே காரணத்தால், குழந்தைகளை துவக்க பள்ளிகளில் சேர்க்கவும் பெற்றோர் தயங்குகின்றனர். சில பள்ளிகளில் 50 சதவீதம் கட்டணத்தை செலுத்த வாய்ப்பளித்துள்ளனர். சில பள்ளிகளில் முழுமையாக செலுத்தும்படி, நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் பலரும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவில்லை. இதனால், பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
Advertisement