சென்னை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த ஆட்சிக்கு வந்ததிலிருந்து 8 வருட காலத்தில், தற்போதுவரை பெட்ரோல் மீதான வரி உயர்வு 200 சதவீதத்துக்கும் மேலும், டீசல் விலை 7 மடங்கும் உயர்ந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த பிரதமரின் பேச்சு தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசையும் மாநில அரசையும் ஒப்பிட்டு கணக்கை மட்டும் பார்ப்போம். 2014-ல், மத்திய அரசில் இன்றைக்கு இருக்கும் பிரதமர் வரும்போது மொத்த வரி, தமிழக முதல்வர் கூறியபடி, பெட்ரோலில் 9 ரூபாய் நாற்பத்து சொச்சம் பைசா. அதில் பெரும்பான்மையானது மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கக் கூடிய excise ஆக இருந்தது. 5 ரூபாயை குறைப்பதற்கு முன்னர், 32 ரூபாய் அப்போது ஏழே வருடத்தில் இப்போது 8 வருடங்கள் ஆகப் போகிறது. அவர்கள் 3 மடங்குக்குமேல் உயர்த்திவிட்டு, அதற்குப் பிறகு 5 சதவீதம் குறைத்திருக்கிறார்கள். அப்போதும் மொத்த உயர்வு, பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை 200 சதவிகிதத்திற்குமேல் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது டீசலில் 3 ரூபாய் 47 பைசா, இன்றைக்கு 10 ரூபாய் குறைத்த பிறகுகூட 22 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. அப்படியென்றால், 7 மடங்கு அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், இப்போதும் உயர்த்தியது 7 மடங்கு. இதனால், மத்திய அரசாங்கத்தினுடைய மொத்த வருமானம் direct tax-ல் வராமல், சதவீதம் குறைந்து indirect regressive tax சாமானியரை பாதிக்கக்கூடிய வகையில்தான் வருகிறது. இதை பலமுறை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். மீண்டும் திருப்பிச் சொல்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை பெட்ரோல் வரியை 1 ரூபாயாக இருந்ததை, 3 ரூபாயாக உயர்த்தி டீசல் வரியை ஒரு ரூபாயாக இருந்ததை, 6 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது? முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி 2011-ல் முடியும்போது பெட்ரோலில் வரி, 14 ரூபாய் 47 பைசா. தற்போது திமுக 2021-ல் ஆட்சிக்கு வரும்போது 26 ரூபாய் 20 பைசா. தமிழக முதல்வர் சொல்லி 3 ரூபாய் குறைத்த பிறகு, மத்திய அரசு 5 ரூபாய் குறைக்கும்போது, அதில் தமிழக அரசு 13 சதவீதம் கூடுதலாக எடுப்பதன் காரணமாக இன்னும் 65 பைசா குறைத்த பிறகு, இன்றைக்கு நம்முடைய மாநிலத்தினுடைய வருமானம் 22 ரூபாய் 54 பைசா. அப்படியென்றால் சுமார் 50 சதவீதம்தான் நம்முடைய வரி இந்த 7 வருடத்தில் அதிகரித்திருக்கிறது.
அவர்களுடையது 300 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. எது நியாயம். இதேபோல் டீசலில் கருணாநிதி ஆட்சி முடியும்போது, 7 ரூபாய் 60 பைசா, தற்போது திமுக ஆட்சிக்கு வரும்போது 19 ரூபாய் 75 பைசா. மத்திய அரசு 10 ரூபாய் குறைத்ததனால் ரூ.1.30 போனதால், இன்றைக்கு 18 ரூபாய் 45 பைசா. மத்திய அரசினுடையது 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே எந்த மாநிலமும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்று சொல்வது தவறு. ஏனென்றால் அவர்கள் குறைப்பதற்கு முன், தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, தமிழக முதல்வர் சொல்லி நாம் இங்கே குறைத்து விட்டோம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச் சேர உதவ வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. ஆனால், சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை.
இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்த மாநிலங்களின் மக்களுக்கு செய்கிற அநீதி மட்டுமல்ல, இது மற்ற மாநிலங்களிலும் தீங்கு ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சில காரணங்களுக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ மத்திய அரசு சொன்னதைக் கேட்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர்” என்று கூறியருந்தார்.