பாலிவுட் நடிகர்களுக்கு கே.ஜி.எப்.,ஐ நினைத்து பயம் : ராம் கோபால் வர்மா

மும்பை: கன்னட நடிகர் சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தி மொழி குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்துக் கொண்ட நிலையில், பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா, கன்னட டப்பிங் படமான கே.ஜி.எப்., 2 தொடக்க நாளில் ரூ.50 கோடி வசூல் செய்ததால் பாலிவுட் நடிகர்கள் 'இன்செக்யூர்' ஆக உள்ளனர் என மேலும் பற்ற வைத்துள்ளார்.

தமிழில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். இவர் தனது புது பட விளம்பர நிகழ்ச்சியில் சம்பந்தமில்லாமல் ஹிந்தி தேசிய மொழி கிடையாது என பேசியது சர்ச்சையானது. சுதீப் கருத்தை மறுத்து ஹிந்தி தான் தேசிய மொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிலடி தந்தார். உடனே சுதீப் தான் வேறொரு அர்த்தத்தில் அவற்றை கூறினேன், நமது நாட்டின் அனைத்து மொழிகளை மதிக்கிறேன், விரும்புகிறேன். இத்துடன் இந்த விஷயத்தை விட நினைக்கிறேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அஜய் தேவ்கனும் தன்னை பொறுத்தவரை சினிமாத் துறை ஒன்று தான் என கூறினார்.

இந்நிலையில் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா மீண்டும் இவ்விஷயத்தை கிளறியுள்ளார். தனது சமூக வலைதள பதிவில், “சுதீப் சொல்வது மறுக்க முடியாத அடிப்படை உண்மை. கே.ஜி.எப்., 2 கன்னட டப்பிங் திரைப்படம் தொடக்க நாளில் ரூ.50 கோடி வசூலித்ததால் வடநாட்டு நட்சத்திரங்கள் தென்னக நட்சத்திரங்களை கண்டு பாதுகாப்பற்றவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வரும் ஹிந்தி படங்களின் துவக்க வசூலை நாம் பார்க்கத் தானே போகிறோம்.” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.