'இந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டுக்கு செல்லலாம்' – உ.பி. அமைச்சர் கருத்தால் சர்ச்சை

லக்னோ: இந்தி பேசமுடியாது என்றால் வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், `இந்தி தேசிய மொழி கிடையாது` என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில்தர இருவருக்கும் ட்விட்டரில் வார்த்தை மோதலே ஏற்பட்டது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில், நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சுதீப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு இந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் நிஷாத்தின் இந்தக் கருத்துக்கு பலரும் சமூகவலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.