இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசி மறைக்கமுயன்ற அதிமுக பிரமுகர் உட்பட 7 பேர் கைது!

தஞ்சாவூர் அருகே இளம்பெண் ஒருவரைச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டி மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் நான்கு பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கட்டப்பஞ்சாயத்துப் பேசி இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற அ.தி.மு.க பிரமுகர் உட்பட ஏழு பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் ஒருவர், தஞ்சாவூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி இரவு பணி முடிந்தபிறகு ஊருக்குச் செல்ல பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது குருங்குளம் மேற்கு ஊராட்சி, மேட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கொடியரசன் (25) என்பவர், இளம்பெண் அருகே சென்று தனது பைக்கை நிறுத்தியிருக்கிறார்.

அந்தப் பெண்ணும், கொடியரசனும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. “ஊருக்குத்தான போற வா… நான் கொண்டு போய் விடுறேன், வண்டியில ஏறு” என்று அந்தப் பெண்ணை அழைத்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தப் பெண்ணை கொடியரசன் கட்டாயப்படுத்தி பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட கொடியரசன்

அந்தப் பெண்ணின் ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, கொடியரசன் முந்திரிக்காட்டுக்கு பைக்கை ஓட்டிச் சென்றிருக்கிறார். அதையடுத்து பதறிப்போன அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டிருக்கிறார்.

அந்த முந்திரிக்காட்டில் ஏற்கெனவே கொடியரசனின் நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த சாமிநாதன் (30), சுகுமாரன் (26), கண்ணன் (25) ஆகிய மூன்று பேரும் அந்த முந்திரிக்காட்டில் மறைந்திருந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி கொடியரசன் உள்ளிட்ட நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது பெண்ணின் சாதிப்பெயரைச் சொல்லி அவர்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ்

பின்னர், அந்தப் பெண்ணை, `இங்கு நடந்ததை வெளியில் சொன்னால்.. உன்னை என்ன செய்வோம் என்றே தெரியாது’ என்று மிரட்டி அவர் ஊருக்குள் இறக்கிவிட்டிருக்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், தஞ்சை வல்லம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து வல்லம் டி.எஸ்.பி., பிருந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்துகொண்ட நான்கு பேரும், தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்து வல்லம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நண்பர்கள்

விசாரணையில் கைதான நான்கு பேரும், இந்தச் சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகர் வேலுச்சாமி மற்றும் இன்னும் மூன்று பேர் பஞ்சாயத்துப் பேசி மறைக்க முயன்றதாகக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து போலீஸார் அ.தி.மு.க பிரமுகரும், குருங்குளம் மேற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான வேலுச்சாமி (60), செல்லதுரை (40), தமிழரசன் (27) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். அப்போது பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, `நாங்கள் தீ வைத்துக் கொள்ளப் போகிறோம்… வேலுச்சாமி உள்ளிட்டவர்களை வெளியே விடுங்கள்’ எனக் கூறி தர்ணா போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பெட்ரோலை கைப்பற்றிய போலீஸார், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தோம். “ஊரில் விடுவதாக இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, நண்பர்களான நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை வெளியே தெரியாமல் மறைக்க வேலுச்சாமி பஞ்சாயத்துப் பேசியுள்ளார். அவர் பாலியலில் குற்றத்தில் சம்பந்தப்பட்ட கண்ணனின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண் குடும்பத்திடம், `பணம் தருகிறோம், அதை வாங்கிக் கொண்டு சத்தமில்லாமல் முடித்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கின்றனர். இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.