உக்ரைனில் உணவுக்காக வீட்டில் இருந்து வெளியே வந்த 16 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போர் தாக்குதல் 64 நாட்களை கடந்துள்ளது.
இந்த போர் நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதோடு பெண்கள், சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது 16 வயது நிரம்பிய 6 மாத கர்ப்பிணி ஒருவர் கூறியுள்ள புகார் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறுகையில், கெர்சன் பகுதியில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
குண்டுவீச்சில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்துடன் பதுங்கி இருந்தோம்.
மாலை நேரத்தில் வயிறு பசித்தது. இதனால் உணவுக்காக வெளியே வந்தோம்.
எதிர்பாராத விதமாக குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் எங்களை பார்த்துவிட்டார். வயது, பெயர் விபரங்களை கேட்டார். நாங்கள் கூறினோம். பிறகு எனது தாயாரை அவர் அழைத்தார்.
அதன்பிறகு அவரை விட்டுவிட்டு என்னை அழைத்தார்.
நான் சென்றபோது ஆடைகளை அகற்றும்படி கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து எனது ஆசைக்கு இணங்காவிட்டால் இன்னும் 20 பேரை கூப்பிட்டு வருவேன் என்றும் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார்.
நான் பயந்துவிட்டேன். வன்கொடுமை செய்த அந்த நபர் என் கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றார். என்னை இன்னொரு வீரர் தான் காப்பாற்றினார். கொடுமை செய்த நபருக்கு நீலநிற கண்கள் இருந்தது.
வேறு எதுவும் எனக்கு நினைவில்லை.
மேலும் அந்த நபரை சக வீரர்கள் ‛ப்ளூ’ என அழைக்கின்றனர். பின்னர் ரஷ்ய தளபதி ஒருவரிடம் அழைத்து செல்லப்பட்டேன் .
அவரும் என்னை திட்டினார், நான் அழ ஆரம்பித்தேன்.
ஆனால் அவர் என்னை எதுவும் செய்யவில்லை, நான் பொய் சொல்கிறேனா என்பதை சோதிக்க அவ்வாறு செய்ததாக கூறினார் என தெரிவித்துள்ளார்.