கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு வெகு அருகில் ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
ஏப்ரல் பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் ஐ.நா. பொதுச் செயலாளர் வந்திருந்த வேளையில் மீண்டும் தொடங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்று சேதமடைந்தது. அதிலிருந்த 2 தளங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கீவ் மேயர் விடாலி க்லிட்ஸ்கோ கூறுகையில், செவ்சென்கோவ்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு தாக்குதல்கள் நடந்தன. இப்போது கீவ் நகரிலேயே மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்துள்ளது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் தான் ஐ.நா. குழு ஆய்வில் ஈடுபட்டிருந்தது என்பதால் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இது குறித்து ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அது போர் பாதித்த பகுதி தான் என்றாலும் கூட எங்களுக்கு அருகிலேயே ஒரு தாக்குதல் நடந்தது அதிரிச்சியைத் தந்தது. ஆனாலும் நாங்கள் அனைவரும் பத்திரமாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தான் அண்டோனியோ குத்ரேஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கே ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடந்தபோது ரஷ்ய ஏவுகணைகள் நகரை நாசம் செய்தனர். 5 ராக்கெட்டுகளை ரஷ்யா அடுத்தடுத்து அனுப்பியது.
குவியும் கண்டனம்: ஐ.நா. பொதுச் செயலாளர் வந்திருந்த வேளையில் நடந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா இது காட்டுமிராண்டித்தனம் என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறுகையில் இத்தாக்குதல் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார்.
21 ஆம் நூற்றாண்டில் போர் என்பது முட்டாள்தனம். போர் கொடூரமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்தார்.