சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த தேர்தல் வழக்கை, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘உதயநிதி தனது வேட்புமனுவில் தவறானதகவல்களை அளித்துள்ளதாகவும், இதுதொடர்பான ஆட்சேபங்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலினும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் மனுவை ஏற்றுக் கொண்டு, ஆர்.பிரேமலதா தொடர்ந்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவி்ட்டுள்ளார்.