மதுரா,
உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது.
இது பற்றி அறிந்து அந்த இளைஞர் கடும் மன உளைச்சலிலிருந்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது நண்பர்களிடம் காதலி பிரிந்துவிட்டதாகக் கூறி புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளைஞர், திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். திருமண வரவேற்பு முடிந்த நிலையில் மணமகள் அறைக்கு சென்ற போது பின் தொடர்ந்த அவரது காதலன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாறியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே மணமகள் சுருண்டு விழுந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மணமகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஏன்.ஐ-யிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறியதாவது:-
என் மகள் “ஜெய் மாலா’ திருமண சடங்கு முடிந்து மணமகள் அறைக்கு சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சுட்டுக் கொன்றார். இது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.