மும்பை: கேன்ஸ் திரைப்பட விழா நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் சர்க்கஸ், ஹிரித்திக் ரோஷனுடன் ஃபைட்டர், ஷாருக்கான் நடிக்கும் பதான் படங்களில் நடிக்கிறார் தீபிகா படுகோன். தெலுங்கில் ப்ராஜெக்ட் கே என்ற பெயரிடப்படாத படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். ஏற்கனவே ஹாலிவுட் படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார். ட்ரிபிள் எக்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் எட்டு நடுவர் குழு உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவராக இடம் பிடித்துள்ளார். கேன்ஸ் 2022 ஜூரிக்கு பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்குவார். இவர்கள் தவிர மேலும் 7 பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். மே 17 முதல் 28 வரை இந்த பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது இந்த பெருமை தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது. இது குறித்து தீபிகா கூறும்போது, ‘கேன்ஸ் பட விழாவில் நடுவர் குழுவில் இடம் பெற்றது பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்தியாவுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பெருமை கிடைத்திருக்கிறது. நமது நாட்டின் பெயரை நிலைநாட்டும்படி எனது பணி இருக்கும். அதே சமயம், இந்த பணி சவால் நிறைந்ததாகவும் அமையும்’ என்றார்.