கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக சிக்கும் வாகன ஓட்டிகள், காதல் ஜோடிகள், திருநங்கைகள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை நீலம்பூர் பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டியும் தாக்கியும் 2 பேர் பணம் பறித்துச் சென்றுள்ளனர்.
காதல் ஜோடி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே திருநங்கைகள் வழிப்பறியில் ஈடுபடுவதாக எழுந்த புகார்களின் பேரில் அவர்களை அழைத்து அறிவுரைகளயும் ஆலோசனைகளையும் போலீசார் வழங்கினர்.
அப்போது தங்களிடம் பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாகவும் அதனால்தான் தாங்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் திருநங்கைகளில் சிலர் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் ஈடுப்பட்டது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ராஜராஜசோழன் என்பவரும் ஆயுதப்படை காவலரான ஜகதீசன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.