“திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன்…” என்று நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட இயக்குனருமான பா.இரஞ்சித் மதுரையில் பேசியிருக்கிறார்.
தமிழகத்தின் தொன்மைக்கலைகளையும், கலைஞர்களையும், நவீன கலை வடிவங்களையும் கொண்டு சேர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திவருகிறது.
இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தை தலித் இலக்கிய மாதம் என அறிவித்து ‘வானம் கலைத் திருவிழா’ வை நடத்துகின்றனர். இன்று மதுரை உலகத் தமிழ் சங்க அரங்கில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் `தலித் இலக்கிய கூடுகை’ நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சியில் தொடங்கி வைத்த இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசியலுக்கான முக்கிய வடிவமாக கலை, இலக்கியம் உள்ளது. அதற்காகத்தான் வானம் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் இலக்கிய சூழலுக்கும் பொது மக்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுச் சமூகம் இலக்கியத்தை கொண்டாடுவது மிகக் குறைவு. ஆனால், இன்று இலக்கியத்தை வாசிக்கிற இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். தலித் இலக்கிய வகைமை என ஒன்று இருப்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு சாதிக்கான கூடுகை கிடையாது. இது தமிழகத்தில், இந்தியாவில் மறுக்கப்பட்ட எழுத்துக்களை பேசுவதற்கான களம். இது பெரிய ஜனநாயக வடிவம்
அமெரிக்க, ஆப்பிரிக்க, அரபி கறுப்பு இலக்கியங்கள் கொண்டாடப்படும் அளவுக்கு தமிழ், இந்திய சூழலில் தலித் இலக்கியமும் கொண்டாடப்பட்ட வேண்டும்.
இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. எனவே, இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன். இளையராஜாவின் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையைத்தான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம். இந்த இலக்கிய கூடுகையின் நிறைவில் எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு விருது அளித்து கவுரவிக்க உள்ளோம்.” என்றார்.