சென்னை: மருத்துவத் துறையில் நடப்பாண்டில் 4,308 காலிப் பணயிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்:2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட வேண்டிய பல்வேறு பதவிகள் குறித்து தகுதி பெற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் இவ்வாண்டிற்கான உத்தேசமான முன்னோடி கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட 18 பதவிகளில் உள்ள 4,308 காலிப் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பணியாளர்களை நடப்பாண்டில் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உதவி மருத்துவர் (பொது) – 1021
- உதவி மருத்துவர் (பொது) சிறப்பு தகுதித் தேர்வு -788
- உதவி மருத்துவ அலுவலர் (ஆயுஷ்) – 173
- திறன்மிகு உதவியாளர் நிலை -II (மின்வினைஞர் நிலை II) – 3
- உணவு பாதுகாப்பு அலுவலர் – 119
- கள உதவியாளர் -174
- கிராம சுகாதார செவிலியர் (மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடம்) – 39
- சுகாதார ஆய்வாளர் நிலை – II (ஆண்கள்) – 334
- செவிலியர் (மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடம்) – 88
- மருந்தாளுநர் (ஆயுர்வேதா) – 6
- மருந்தாளுநர் (சித்தா) – 73
- மருந்தாளுநர் (யுனானி) – 2
- மருந்தாளுநர் (ஹோமியோபதி) – 3
- அறுவை அரங்கு உதவியாளர் – 335
- இருட்டறை உதவியாளர் – 209
- இயன்முறை சிகிச்சையாளர் நிலை II – 25
- மருந்தாளுநர் -889
- இளநிலை பகுப்பாய்வாளர் (உணவு பாதுகாப்புத் துறை) 29 , என மொத்தம் 4308 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.