“நண்பன்தானே” என நம்பிச் சென்ற பெண்.. 4 பேராகச் சேர்ந்து நாசம் செய்த கும்பல்.!

தஞ்சாவூர் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இளம்பெண்ணை வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவயதில் இருந்து பழகிய நபர்தானே என நம்பிச் சென்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து நாசம் செய்ததோடு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அந்த நபர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்… 

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 23வயதான அந்தப் பெண், தஞ்சையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்து நிலையத்தில் இளம்பெண் காத்திருந்துள்ளார்.

தோழகிரிப்பட்டிக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறப்படும் நிலையில், நகர்ப்பகுதியில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்க்காரர்களோ, தெரிந்தவர்களோ வாகனங்களில் சென்றால் அவர்களுடன் லிப்ட் கேட்டு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு ஊருக்குச் செல்ல இளம்பெண் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவரது பக்கத்து ஊரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளான்.

வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி, இளம்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளான் கொடியரசன். சிறு வயதில் இருந்த பழக்கமானவன், தெரிந்தவன், பக்கத்து ஊர்க்காரன் என்பன உள்ளிட்ட காரணங்களால் இளம்பெண்ணும் அவனை நம்பி பைக்கில் ஏறிச் சென்றுள்ளார்.

நகர எல்லையைத் தாண்டிய பைக், வழக்கமாகச் செல்லும் பாதையில் செல்லாமல் அடர்ந்த காட்டு வழியே சென்றுள்ளது. இதனால் சந்தேகமும் அதிர்ச்சியும் அடைந்த பெண், ஏன் பாதை மாறிச் செல்கிறாய் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் சொல்லாமல் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்ற கொடியரசன், ஆள் அரவமற்ற ஓரிடத்துக்குச் சென்றதும் சத்தம்போட்டு தனது நண்பர்களை அழைத்துள்ளான்.

அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த கொடியரசனின் நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் உள்ளிட்டோர், கொடியரசனுடன் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. வீட்டுக்குத் தாமதமாகச் சென்ற இளம்பெண், அழுதுகொண்ட நடந்த சம்பவங்களை பெற்றோரிடத்தில் கூறியுள்ளார்.

பெற்றோர் நியாயம் கேட்கச் சென்றபோது, கட்டப்பஞ்சாயத்துக்கு வந்த இரண்டு பேர், அவர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோயிருந்த இளம்பெண், ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தாமதமாகச் சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து கொடியரசனையும் அவனது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் குறித்து வெளியே சொல்லக்கூடாது என மாணவியையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குருங்குளம் மேற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, செல்லதுரை, தமிழரசன் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.