நாமக்கல்: குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 7 நிறுவனங்கள்! – அதிரடி காட்டிய அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தொடர் புகார் வந்தது. அதோடு, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையின்படி, பள்ளியில் இடை நின்றவர்கள் அதிகளவில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டது. இதனால், இடைநின்ற மாணவர்கள் என்ன ஆனார்கள், என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உத்தரவின் பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்கு சென்று அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனரா, அல்லது வேலைக்கு செல்கின்றனரா என்று நேரடி ஆய்வில் இறங்கினர். அவர்களின் விசாரணையில், பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

நாமக்கல்

அதோடு, நாமக்கல் மாவட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்கு செல்கின்றனரா என்பது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளி பணிபுரிந்து வந்ததையும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்கு உட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததையும் கண்டறிந்தனர். அந்த வகையில், மொத்தம் 7 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதோடு, மேற்கண்ட 7 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் குழந்தை தொழிலாளர் சட்ட விதிகளின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்சமாக அபராதம் ரூ. 20,000 விதிக்கப்படும்” என தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.