நிலக்கரி பற்றாக்குறையால் 42 ரெயில்கள் காலவரையின்றி ரத்து

புதுடெல்லி:
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியில் இருந்து பெறப்படுகின்றன. கோடையின் வெப்ப அலையால் மின் நுகர்வின் அளவும், மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மின் வினியோக தடை, கடும் வெப்பத்திற்கு இடையே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மின் உலைகளில் உள்ள நிலக்கரி இருப்பு இம்மாத தொடக்கத்திலேயே ஏறக்குறைய 17 சதவீதம் சரிவடைந்ததால், தேவையான அளவை விட 3ல் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் சில தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன. நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது என பல மாநிலங்கள் கூக்குரலிட்டு வருகின்றன.
இந்நிலையில், அனல் மின் உலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்காக 42 பயணிகள் ரெயில் நாடுமுழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. இதன்மூலம் நிலக்கரியை கொண்டு செல்லும் சரக்கு ரெயில்கள் விரைவாக சென்று சேரும். இதற்காக காலவரையின்றி ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
நிலக்கரி கொண்டு செல்வதற்காக போர்க்கால சூழலில் நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறோம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.