புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அதிக எரிபொருள் விலை, நிலக்கரி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எதுவாக இருந்தாலும் மாநில அரசுகளே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. எரிபொருள் மீதான மொத்த வரியில் 68 சதவீதம் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்றாலும் பிரதமர் மோடி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். பிரதமர் மோடியின் கூட்டாட்சி முறை என்பது அனைவரையும் ஒத்துழைக்க வைப்பதல்ல, வற்புறுத்திப் பெறுவது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த நவம்பரில் குறைத்தபோது, வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியது” என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.