முரசொலி விவகார அவதூறு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக எல்.முருகனுக்கு விலக்கு

சென்னை: முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்பி, ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்பி, ஆனதால் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 22-ம் தேதி எல்.முருகன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகாததால் வழக்கு மே 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் எல். முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மே 2-ம் தேதி எல்.முருகன் விசாரணைக்கு ஆஜராக விலக்களித்து, விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.