அழகில்லை என்பதால் மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்..! கொலையை மறைக்க நாடகம்!

திருமணமாகி 2 வருடம் கடந்த நிலையில் மனைவி அழகில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த கணவன், மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவரது மனைவி கல்யாணி இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்த நாட்களிலிருந்தே கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்கள் தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மூன்று மாத கர்ப்பிணியான தனது மனைவி கல்யாணி தான் திட்டியதால் மனமுடைந்து வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தருண் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், திருமணமான நாள் முதல் தன் மனைவி அழகில்லை என்று அடிக்கடி தகராறு செய்து வந்த கணவர் தருண். மனைவியை தனக்கு பொருத்தமில்லாதவர் என்று அடித்து உதைத்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி கர்ப்பிணியானதால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனது உறவினருடன் இணைந்து தனது மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலி மருந்து மற்றும் ஆசிட் ஆகியவற்றை வாயில் ஊற்றி கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கல்யாணி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கணவர் தருணையும், உடந்தையாக இருந்த உறவினரையும் கைது செய்துள்ளனர்.

மனைவி அழகாக இல்லாததை காரணம் காட்டி மூன்று மாத கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.