பெய்ஜிங்: கரோனா தொற்று பரவல் காரணமாக சீனா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மீண்டும் செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியமாணவர்கள் சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்விகளை படித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள். கரோனா வைரஸ்தொற்று பரவல் காரணமாகஇந்திய மாணவர்கள் சீனாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினர்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த வெளிநாட்டினருக்கு விசாவழங்குவது நிறுத்தப்பட்டது. மற்றும் விமான போக்குவரத்திலும் சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிய மாணவர்கள், கல்வியைத் தொடர மீண்டும் சீனா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். எனினும், ஆன்லைனில் படித்து பட்டம் பெற்றால் அதை அங்கீகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய மாணவர்களை திரும்ப அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாஹோ லிஜியான் நேற்று பெய்ஜிங்கில் அளித்த பேட்டியில், ‘‘சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீண்டும் எங்கள் நாட்டுக்கு திரும்ப சீனா முக்கியத்துவம் அளிக்கிறது.
மற்ற நாடுகளின் மாணவர்கள் சீனாவுக்குத் திரும்பும் நடைமுறைகள் குறித்து இந்திய தரப்புடன்பகிர்ந்து கொண்டோம். உண்மையில், இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட் டுள்ளன. சீனாவுக்குத் திரும்பிவர வேண்டிய மாணவர்களின் பட்டியலை இந்தியா தரப்பில் வழங்க வேண்டும்’’ என்றார்.