புதுடில்லி : கடும் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது.
இதையடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை சரக்கு ரயில்கள் வேகமாக ஏற்றிச் செல்ல வசதியாக, நாடு முழுதும்௪௨ பயணியர் ரயில்களின் சேவையை ரயில்வே ரத்து செய்துள்ளது.
நாட்டின் மின்சார பயன்பாட்டில் ௭௦ சதவீதம், அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நேரத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால், அனல் மின் நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளன.
நிலக்கரி கையிருப்புமத்திய மின் வாரிய ஆணையத்தின் தகவல்படி, நாடு முழுதும் உள்ள 165 அனல் மின் நிலையங்களில், 56 மின் நிலையங்களில் 10 சதவீதத்திற்கு குறைவாகவும், 26 மின் நிலையங்களில் 5 சதவீதத்திற்கு குறைவாகவும் நிலக்கரி கையிருப்பு உள்ளது.இதனால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பல மாநிலங்களில் பல மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நிலக்கரி கொண்டு செல்வதற்கு ஏதுவாக, நாடு முழுதும் 42 பயணியர் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை போர்க்கால அடிப்படையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியை சரக்கு ரயில்களில் கொண்டு செல்வதற்கான நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, நாடு முழுதும் ௪௨ பயணியர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் இயக்கப்படும்இது தற்காலிகமான நடவடிக்கை தான். நிலைமை சீரடைந்ததும் பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20.4 சதவீதம் அதிகமான நிலக்கரியை, சரக்கு ரயில்கள் ஏற்றிச் சென்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.மெட்ரோ ரயில் சேவை பாதிக்கும்மின் தட்டுப்பாடு பற்றி, டில்லி மாநில மின் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:டில்லியின் முக்கிய அனல் மின் நிலையங்களில், 21 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு வைத்திருக்க வேண்டிய நிலையில், ஒரு நாளைக்கு தேவையான அளவை விட, குறைவான அளவு மட்டுமே கையிருப்பில் உள்ளது.
எனவே, டில்லிக்கு கூடுதல் நிலக்கரியை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், மெட்ரோ ரயில் சேவை, மருத்துவமனைகளின் செயல்பாடு ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல மாநிலங்களில் அனல் காற்றுமின் வெட்டால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை வெப்பமும் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் நேற்று, ௪௫ டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவானது.
அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் டல்டோன்கஞ்ச் பகுதியில் 45.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிராவின் விதர்பா ஆகிய இடங்களில், அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் மிகவும் அதிகரித்து அனல் காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.