மலையாளத்தில் சாதிப்பாரா காயத்ரி?

18 வயசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூரு தமிழ் பொண்ணு காயத்ரி சங்கர். அதன்பிறகு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன்பிறகு பொன்மாலை பொழுது, ரம்மி, மத்தாப்பூ, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மலையாளத்தில் ரீமேக் ஆவதாக இருந்தது. அதில் விஜய்சேதுபதி கேரக்டரில் நிவின்பாலி நடிக்க காயத்ரியும் நடிப்பதாக இருந்தது. அது நடக்கவில்லை. பல வருட காத்திருப்புக்கு பிறகு தற்போது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் 'இன்னா தன் கேஸ் கொடு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட மலையாள வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. எனது காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் படத்தில் நடிக்கிறேன். இந்த படம் கொரோனா தொற்றுக்கு முன்பே தொடங்கியது. எனது துரதிர்ஷ்டம் கொரோனாவால் படம் தாமதமானது. இப்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது கிராம பின்னணியில் உருவாகும் ஒரு சீரியசான காமெடி படம்.

எனது தாயார் மலையாளி என்பதால் அவர் எனக்கு வசனங்களை சொல்லிக் கொடுத்தார். அதனால் என்னால் நன்றாக பேச முடிந்தது. இந்த படத்தின் படப்படிப்புக்காக நாங்கள் குடும்பத்தோடு கேரளாவில் இருக்கிறோம். மாமனிதன், பகீரா, காயல், டைட்டானிக் படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.