புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், புல்பானி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அங்கடா கன்ஹார் (56). ஆளும் பிஜேடி கட்சி எம்எல்ஏவான இவர், 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். எம்எல்ஏ ஆனதும் 8ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார். இதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தார்.இந்நிலையில், ஒடிசாவில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 540 தேர்வு மையங்களில் மொத்தம் 5.8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், நேற்று நடந்த தேர்வில் எம்எல்ஏ அங்கடாவும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். கந்தமால் மாவட்டம், பித்தாபாரி கிராமத்தில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிய பிறகு அங்கடா அளித்த பேட்டியில், ‘‘பஞ்சாயத்து உறுப்பினர்கள் சிலர் தேர்வை எழுதும்படி எனக்கு ஊக்கம் அளித்தனர். இந்த தேர்வில் வெற்றி பெறுவேனா என்பது எனக்கு தெரியாது. எஸ்எஸ்எல்சி சான்றிதழை பெறுவதற்காக தேர்வில் கலந்து கொண்டேன்,’’ என்றார். எம்எல்ஏ.வின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘அங்கடா கடந்த 1978ம் ஆண்டு தனது படிப்பை விட்டார். அதன் பிறகு அவர் மனதில் எப்பொழுதும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது,’’ என்றார்.