நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை பலர் பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி நேற்று காலமானார்.
வடிவேல் நடித்த கி.மு. என்ற படத்தில் இடம்பெற்ற போறதுதான் போற அப்படியே அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போப்பா என்ற காமெடி இடம்பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காமெடி காட்சியில் நடித்தவர் ரங்கம்மாள் பாட்டி. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம், கண்ணூர் அருகே உள்ள தெலுங்குபாளையம்.
சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். அவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குணச்சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு, வயது முதிர்வாலும் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி நேற்று காலமானார். இது திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.