அஜித் எனும் வலிமை: அறிந்ததும், அறியாததும்… – பிறந்தநாள் ஸ்பெஷல்

ஆசை நாயகனாய், காதல் மன்னன்-ஆக வந்து அமர்க்களம் செய்து எதிராளிகளுக்கு வில்லன்-ஆக, பில்லாவாக உண்மையான சிட்டிசன்ஆக, எந்த பின்புலமும் இன்றி சினிமாவில் வரலாறு படைத்து, தல எனும் கிரீடத்தை கொடுத்தாலும், வேண்டாம் வேண்டாம் என ஒதுக்கி வைத்தாலும் வீரம்-ஆன, விவேகம் படைத்த, விஸ்வாசம் நிறைந்த கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு, ஒவ்வொரு முறையும் தன்னை தானே வலிமை படைத்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிவிட்ட நடிகர் அஜித்திற்கு மே 1ம் தேதி, உழைப்பாளர் தினமான இன்று 51வது பிறந்தநாள்.

கோடிக் கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் எப்படி சினிமாவுக்கு வந்தார், சினிமாவில் எப்படி அவர் வளர்ந்தார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரைப்பற்றி அறியாத விஷயங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

* 1971-ம் ஆண்டு மே 1ம் தேதி, பி.சுப்ரமணியம் – மோகினி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அஜித் குமார். பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் முன்னே படிப்பை நிறுத்திக் கொண்டார். இருசக்கர வாகன மெக்கானிக்காக தனது ஆரம்பகால வாழ்க்கையை துவங்கினார்.

* அஜித்தை பொருத்தவரையில் விருந்துகளுக்கு விழாக்களுக்கு செல்லும் பழக்கம் இல்லாதவர் படப்பிடிப்பு முடிந்த பிறகு நேராக வீட்டிற்கு வருபவர், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து கொண்டு போய் விடுவதும், வீட்டில் சமையல் செய்வதும் குடும்பத்தோடு குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதும் அவரது பழக்கம். குழந்தைகளுக்காக பள்ளியில் நடக்கும் விழாவில் பொறுப்பான தந்தையாக தானும் கலந்து கொள்வார்.

* தற்போது அஜித் ஏரோபிளேன் பற்றியும் டிராோனில் மருந்துகளை எப்படி சப்ளை செய்வது என்பது பற்றியான படிப்புகளை படித்து வருகிறார். வெளிநாட்டில் இப்படி மெடிக்கல் பொருட்களை வழங்குவது பழக்கத்தில் உள்ளது. அதே போல் இந்தியாவிலும் கொண்டு வருவது எப்படி என்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார். ஏற்கனவே சென்னை ஐஐடி., மாணவர்களின் தீக்ஷா குழுவில் டிரோன் தயாரிப்பு பணியில் ஆலோசகராக இவர் பணியாற்றியது அனைவரும் அறிந்த ஒன்று.

* அஜித்தைப் போலவே அவரது மகன் ஆத்விக் இருக்கிறாராம். அதாவது கார் ஓட்டுவதிலும், ஏரோபிளேன் ஓட்டுவதிலும் அதிலுள்ள விபரங்களையும் இப்போதே தெரிந்து வைத்திருக்கிறாராம்.

* கொரோனா பிரச்னையில் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு காலை 10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தானே போன் செய்து, எப்படி இருக்கிறீர்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா ஏதேனும் உதவி தேவையா என்று தினம் போன் செய்து விடுவாராம்.

* அஜித் முதன் முதலில் வாங்கிய Tcw650 எக்ஸ்ப்ளோர் பைக் இன்னும் வைத்திருக்கிறார். அதேப்போன்று முதல் முதலில் வாங்கிய மாருதி காரையும் நினைவாக இன்றும் அப்படியே வைத்திருக்கிறாராம்.

* அஜித் பள்ளியில் முடித்தபிறகு கல்லூரி எதிலும் படிக்கவில்லை. ரங்கா எக்ஸ்போர்ட்டில் வேலை பார்த்தார். அங்கிருந்து இவர் தனியாக ஈரோட்டுக்கு சென்று துணிகளை வாங்கி ஒரு சிறிய அளவில் பிஸினஸ் ஆரம்பித்தார். அதில் நஷ்டம் ஏற்பட அந்த தொழிலையும் விட்டு விட்டார். பிறகு ராம்கி என்பவர் மூலமாக விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படியே படங்களுக்கான வாய்ப்பு வந்து, படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

* சர்க்யூட் 2000 என்று ஒரு டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனியை அஜித் நடத்தி வந்தார். 90களில் அவர் நடித்த படங்களை அவரே வாங்கி இரண்டு மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ரிலீஸ் செய்தார். அதில் சில ஏமாற்றமும், நஷ்டமும் அடைந்ததால் அதை விட்டு முழுக்க முழுக்க நடிப்பில் களமிறங்கினார்.

* நடிகர்கள் சொத்து சேர்த்து கல்யாண மண்டம், வீடு, நிலம் என வாங்கிக் குவிக்கும்போது தனது பணத்தை தனது குட்டி விமான ஆராய்ச்சிக்கு செலவிடுகிறவர். அஜித்தை பொருத்தவரையில் கேளம்பாக்கத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அது பெரும்பாலும் பூட்டியே இருக்கும். பெரிதாக சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை. வங்கி கணக்கில் மட்டுமே பணம் சேர்த்துள்ளாராம்.

சிறு வயதிலிருந்தே ரேஸ்கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் மிகுந்த நடிகர் அஜித், சென்னை, மும்பை, டில்லி ஆகிய ஊர்களில் நடந்த பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு நடந்த “பார்முலா ஆசியா பிஎம்டபுள்யூ சாம்ப்பியன்ஷிப்” பந்தயத்தில் நடிகர் அஜித் பங்குபெற்றார். 2010 ஆம் ஆண்டு நடந்த “பார்முலா2 சாம்ப்பியன்ஷிப்” பந்தயத்திலும் கலந்துகொண்டார்.

* ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார் என்றால் அதை 4 அக்கவுண்ட் ஆக பிரித்துவிடுவார். அடிக்கடி திருப்பதிக்கு செல்வார் அதனால் கோவிலுக்கு என்று ஒரு தொகை, அஜித்தின் குலதெய்வத்திற்கு என்று ஒரு தொகை, உதவி செய்வதற்கு என்று ஒரு தொகை, வரி செலுத்துவதற்கு என்று ஒரு தொகை என பிரித்து, மீதமுள்ள பணத்தை தன்னுடைய பங்கிற்கு என்று எடுத்துக் கொள்வார். இதை ஆரம்பகாலத்தில் இருந்து இப்போது வரை கடைபிடித்து வருகிறார் அஜித். முறையாக வரி செலுத்தி, சம்பளத்தில் எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்து வருகிறார்.

* அஜித்திற்கு அதிகமாக கோபத்தை உண்டாக்கும் விஷயம் என்னவென்றால் தான் செய்யும் உதவி வெளியே தெரிந்துவிட்டால் அது யார் மூலம் தெரிந்தது, எப்படி தெரிந்தது என்று கேள்விப்பட்டால் மிகவும் கோபப்படுவார். அவர் எல்லோரிடமும் என்ன சொல்வார் என்றால் கொடுப்பவருக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அதை வாங்குபவர்க்கு சங்கடத்தை உண்டாக்கும் என்று கேட்பாராம்.

* அதேப்போல ஒருவருக்கு உதவி செய்கிறார் என்றால் உடனே எடுத்து உதவி செய்து விட மாட்டாராம். உதாரணத்திற்கு ஒருவரது பள்ளி படிப்பிற்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது மருத்துவத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று இவரிடம் யாராவது உதவி கேட்டு வந்தால் இவர் நேரடியாக ஒருவரை அனுப்பி அந்த இடத்திற்கு சென்று பணத்தை செலுத்த சொல்வாராம். கையில் எந்த வகையிலும் காசு கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த மாட்டாராம்.

* அஜித் நிறைய பேரை மருத்துவராக படிக்க வைத்திருக்கிறார். நிறைய பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதை வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வார்.

* பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் அஜித் உதவிகரமாக இருந்திருக்கிறார். தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு உதவிகளை அவர்களது குடும்பத்திற்கு செய்துள்ளார். சமீபத்தில் கொரோனாவுக்காக 5 லட்சம் ரூபாயை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

* முதல் படத்திற்கு மக்கள் தொடர்பாளராக வேலை பார்த்த தனது நண்பர் சுரேஷ் சந்திராவை, தன்னுடைய ஐம்பதாவது படமான மங்காத்தாவிற்கு, அவரை அழைத்து மக்கள் தொடர்பாளர் ஆக்கி பெருமைப்படுத்தினார் அஜித்.

* இந்த நிமிடம் வரை சினிமாவில் என்ன நடக்கிறது, என்ன பிரச்னை போகிறது என்பது அவருக்கு அத்தனையும் தெரியும். ஆனால் எந்த ஒரு விஷயத்திற்கும் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது அவருடைய (கெட்ட) பழக்கம்.

* அஜித் எப்போதும் தன்னுடைய படத்தில் புதிய நடிகராக இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தி மிக எளிமையாக அவரோடு பழகுவார்.

* இன்றைக்கு பெரும்பாலான நடிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் வேளையில் அப்படி எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அவர் கிடையாது.

* “நான் அஜித் குமார் பேசுகிறேன். இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா? எனக்காக இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா?” என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்.

* அஜித் நடித்த கேரக்டரில் முகவரி ஸ்ரீதர் ரோல் அவருக்கு மிகவும் பிடித்தமான மறக்க முடியாத ரோல். அஜித் இதுவரை மேக்–அப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.

* லிப்ட்டில் பெண்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு கதவை திறந்து விட்டு அவர்களை அனுப்பிய பிறகு தான் இவர் செல்வார்.

* அம்மா வழி பாட்டியை பார்க்க அடிக்கடி கோல்கட்டாவிற்கு அஜித் செல்வது வழக்கம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தார் எல்லாரையும் அவர் வீட்டில் உள்ள கார்டனுக்கு வரவைத்து ஏதேனும் சாப்பிட கொடுத்து அவர்களோடு பேசி மகிழ்வது அஜித் வழக்கம்.

* எந்த ஹோட்டல் போனாலும் அவர் சாப்பிட்ட உணவை சமைத்த செப்பை பார்த்து இதை எப்டி செய்தீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு, அவரை பாராட்டி விட்டு அடுத்த நாளே அந்த உணவை தானும் வீட்டில் செய்து பார்ப்பார்.
* அஜித் வீட்டுக்கு பெரிய டீம் யாரும் பார்க்க வந்தால் டீ போட்டு எடுத்துவர சொல்லி, அத்தனை பேருக்கும் தன் கையால் அவர்களுக்கு கொடுப்பார்

* வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பைக் எடுத்து கொண்டு ஐந்நூறு கிலோ மீட்டர் வரை பயணம் செய்து வர அஜித்திற்கு மிகவும் பிடிக்கும்.

* அவர் விரும்பி சமைக்கும் போது யாருக்காவது அந்த உணவு பிடிக்கும் என்று அஜித் அறிந்தால், அவர் எப்போது சமைத்தாலும் அந்த உணவை அவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். சமீபத்தில் கூட அஜித் வைத்த சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல் அவரின் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளது.

* ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்க்லீஷ் படத்தில் ஒரு நம்பிக்கை தரும் ரோலில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு கேட்க, உடனே மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அதற்காக தங்கும் செலவு, போக்குவரத்து செலவு உட்பட எல்லாவற்றையும் தானே செய்து கொண்டார்.

* வீட்டிற்கு வந்து விட்டால் அந்த நேரம் குடும்பதினருக்குதான் என்பதால் வீட்டில் சினிமா பற்றி எந்த விஷயத்தையும் பேச மாட்டார்.

* வீட்டில் கேபிள் அல்லது மின்சாரம், கார் ரிப்பேர் இப்படி எதற்காவது ஆட்களை வர சொன்னால் முதலில் அவர்களிடம் லைசென்ஸ் இருக்கா என்று பார்த்து தான் வேலை செய்ய சொல்வார். அவர்களுக்கு தேவையான உதவிகளை இவரே எல்லாவற்றையும் எடுத்து கொடுப்பார்.

* அஜித்துக்கு ரொம்ப பிடித்த ஊர் லண்டன். எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும், அந்த ஊர் ரொம்ப டிசிப்ளின் என்பார்.

* நடு இரவில் காரில் பயணம் செய்து வந்தால், அந்த ரோட்டில் யாரும் இல்லை என்றாலும் கூட சிக்னலில் நின்று தான் செல்வார், போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுபவர்.

* அஜித் வீட்டிற்கு மிக அருகில் ஒரு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்று கேட்டால், அவரின் உதவியாளர்கள் பலர் ஹெல்மெட் போடாமல் பைக் ஒட்டி வருபவர்களை கண்காணிக்க தானாம்.

* என்னை அறிந்தால் படப்பிடிப்பு சமயத்தில் காலை முதல் மதியம் வரை அவருக்கான காட்சிகளை எடுக்கவில்லை. ஆனால் அஜித் எந்த கோபமும் அடையாமல் படப்பிடிப்புக்கு வந்தவர் ஏன் என் காட்சி எடுக்கவில்லை என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையாம்.

* கிடைக்கும் நேரத்தில் நிறைய சுயசரிதை புத்தகங்கள் படிப்பது அஜித்துக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அவர் விரும்பி ரசித்து படித்தவை மண்டேல்லா சுய சரிதை, இன்றும் படித்து வருகிறார்.

* திருப்பதிக்கு நடைபாதையில் நடந்து சென்று சாமி கும்பிடுவது அஜித்துக்கு பிடித்த விஷயம். பாலக்காடு பக்கம் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம், சென்னையில் சாய்பாபா கோயில் செல்வது வழக்கம்

* எவ்வளவு பிசியான நடிகராக இருந்தாலும் எளிமையாக வாழ ஆசப்படுவார். அளவுக்கு மீறிய ஆசையை எப்போதும் இவர் விரும்புவதில்லை.

* தனது பெயருக்கு முன்னால் எந்த பட்டத்தையும் போட விரும்ப மாட்டார். அமர்க்களம் படத்தில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய அசல் படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜித்தே நீக்க சொல்லிவிட்டார்.

* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் தீனா. படத்தில் “தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. ” என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் தல ஆனார் அஜித்.

* ரசிகர் மன்றம் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களின் உழைப்பும், பணமும் வீணாவதைக் கண்டு பொறுக்க முடியாமல் புகழின் உச்சியில் இருக்கும்போதே ரசிகர் மன்றத்தை கலைத்தவர்.

* தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு தனி காலனி அமைத்து வீடு கட்டிக் கொடுத்த தொழிலாளர்களின் தோழன்.

* பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜித் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை. சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார்.

* டாப் ஹீரோக்கள் ஏதாவது காயம் பட்டு நடிக்க முடியாமல் போய்விட்டால் கோடிக் கணக்கில் வருமானம் போய்விடுமே என்று நினைப்பார்கள். அதனால் டூப் போட்டு நடிப்பார்கள். ஆனால் அஜித் அப்படியல்ல, முடிந்தவரை டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடிப்பார். டாப்பில் இருக்கும்போதே கார் ரேஸ், பைக் ரேஸ் என ரிஸ்க் எடுத்தவர். “டூப் போடுகிறவரும் மனிதர் தானே அவர் உயிரும் முக்கியம்தானே. கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் எனக்காக சில ஆயிரம் சம்பளம் வாங்கும் அவர் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்” என்பார்.

* பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 2013 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து பெங்களுரு வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டார்.

* உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து பிரியாணி விருந்தளிப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து அதை தானே குழுவினருக்கு பரிமாறுவார்.

* அஜித் மிகச் சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த அரிய புகைப்படங்களை பொக்கிஷமாக வைத்திருக்கிறார். சாதாரண நடிகராக அப்புக்குட்டியை விதவிதமாக படம் எடுத்து கொடுத்தவர்.

* படத்தின் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்பட மாட்டார். தயாரிப்பாளருக்கு லாபமா, நஷ்டமா என்று மட்டும் கேட்பார். நஷ்டம் என்றால் தனது அடுத்த படத்தையும் அவருக்கே கொடுப்பார்.

* பொய் பேசத் தெரியாது. புகழத் தெரியாது. அதனாலேயே பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுகிறார்.

* தன் மேலாளர், உதவியாளர், பாதுகாவலர் என யாரையும் எளிதில் மாற்ற மாட்டார். தவறு செய்தால் கூட இருமுறை வாய்ப்பு தருவார். அதிலும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவருக்கு கணிசமான பணத்தை கொடுத்து விலகி நிற்கச் சொல்வார்.

* புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் மூன்று பண்டிகை நாட்களில் அஜித் வீட்டிலிருந்து நண்பர்களுக்கு பரிசு பொருள் வந்து சேரும்.

* தற்போது சொந்தமாக ஓரு ஸ்டூடியோவை ஒன்றையும் உருவாக்கி வருகிறார். அதில் திரையரங்கு உட்பட அனைத்து வசதியும் உண்டு. தன் மகளுக்காக அதை உருவாக்கி வருகிறார்.

* விஸ்வாசம் படத்தின் ஒரு பாடல் காட்சியில் படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு நடன கலைஞர் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார். அவர் வீட்டுக்கு ஒரே மகன் என்ற செய்தி கேள்விபட்டதும் அவருடைய குடும்பத்திற்கு அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார் அஜித்.

* மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போது கேட்ட கால்ஷீட்டுக்காக தற்போது அவர் மறைந்தவுடன் முதல் ஆளாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை தொடர்பு கொண்டு உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நாம் படம் பண்ணுவோம் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியவர் அஜித்.

* தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாகவும் போனிகபூரின் தயாரிப்பில் படம் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.