திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது.
மேலும் அரசு பஸ்சில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, பஸ், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கட்டண உயர்வு வருகிற மே 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் கேரள அரசு பஸ் கட்டணத்தை 73 ரூபாயிலிருந்து 76-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் கத்ரா பொறுப்பேற்பு