சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் – புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார்.

இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில் உள்ள தெற்கு பிளாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பின்னர்
ராணுவ தலைமை தளபதி
மனோஜ் பாண்டே கூறியதாவது:

இந்திய ராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது. அதை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். பணிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளுக்கு இந்திய
ராணுவம்
முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

தற்போதைய, சமகால மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் தயார்நிலையை உறுதி செய்வதே எனது முதல் பணி. உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இதனால், நம்முன் பல சவால்கள் உள்ளன. விமானப் படை, கடற்படையுடன் ஒருங்கிணைந்து மற்றும் ஒத்துழைப்புடன் எந்த சூழ்நிலையையும் ராணுவம் சமாளிக்கும்.

ராணுவத்தில் சுயசார்பை எட்டுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆயுத படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது நோக்கம்.

முந்தைய தளபதிகள் மேற்கொண்ட நல்ல பணிகளை முன்னெடுத்து செல்வதுடன், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நலன் உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய ராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும் வெவ்வேறு ஆயுத மற்றும் சேவை பணியில் இருந்து வந்தபோதும், பணி மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சியில் சம வாய்ப்பினை பெறுகிறார்கள். மூத்த தலைமைத்துவ பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அனைத்து வகையிலான போர்புரிவதிலும் பயிற்சி பெற்றவர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.