நடிகை ஷோபாவின் 42வது நினைவு தினம்

1962ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி கேரளாவில் பிறந்தவர் நடிகை ஷோபா. அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் மகாலக்ஷ்மி மேனன். சினிமாவில் பிரபல நடிகர் பிரேம் நசிர் நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான மலையாள படமான ஜீவித யாத்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஷோபா அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வெறும் 3 வயது தான். குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தபோது ஷோபா என அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து ஏகப்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி உள்ளார் ஷோபா.

மலையாளத்தில் அறிமுகமான அதே நேரத்தில் தமிழிலும் நாணல் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகை ஷோபா. தட்டுங்கள் திறக்கப்படும், இரு கோடுகள், புன்னகை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே, 1971ம் ஆண்டு மலையாள படத்திற்காக மாநில விருதை வென்றுள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1978ம் ஆண்டு வெளியான நிழல் நிஜமாகிறது படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஷோபா. ரஜினி உடன் முள்ளும் மலரும், பாலு மகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள், மூடு பனி உள்ளிட்ட பல மறக்க முடியாத படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் துரை இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான பசி படத்திற்காக தேசிய விருதினை வென்றார்.

நடிகை ஷோபா 1978ம் ஆண்டு தனது 16வது வயதில் இயக்குநர் பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை 2 ஆண்டுகளில் முடிவடைந்தது. தனது 18வது வயதில் 1980ம் ஆண்டு மே 1ம் தேதியான திடீரென தற்கொலை செய்துக்கொண்டார் ஷோபா. இது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. 18 வயதில் 17 படங்களில் நடித்துள்ள ஷோபா, இவ்வுலகை விட்டு மறைந்து இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.