நியூசிலாந்தில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி

வெல்லிங்டன்,
சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.  உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 9 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது.
வெளிநாட்டில் இருந்து நியூசிலாந்து வந்த நபருக்கு இந்த ஒமைக்ரானின் உருமாறிய வகை பாதிப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.  கடந்த ஏப்ரலில் வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய இரண்டு பேரிடம் பிஏ.2.12.1 மற்றும் பிஏ 2.12.2 ஆகிய ஒமைக்ரானின் இரு வகைகள் உறுதியாகி இருந்தன என்று அப்போது அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
கொரோனாவுக்கு கடந்த 2 நாட்களில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்த நிலையில், ஒமைக்ரானின் 3வது வகை உருமாறிய தொற்று அந்நாட்டில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  மக்கள் ஒன்று கூடுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில், அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரானின் புதுப்புது வகைகள் அடுத்தடுத்து நியூசிலாந்தில் உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.