நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். ஆனாலும் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.

பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. படிக்கும் மாணவர்கள் தொடங்கி வணிகர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பாதிப்பு மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரமும் இல்லாததால் பொருளாதார பாதிப்பும் உருவெடுத்து வருகிறது.

அதேசமயம் அதிகரிக்கும் கோடை வெப்பம் மற்றும் மின் தேவையின் காரணமாக மின்வெட்டு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.