நீட்: “அனிதாவின் அண்ணனாகப் பேசுகிறேன்.. அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்!" – உதயநிதி

தி.மு.க மாணவர் அணி சார்பில் சென்னையில் கல்வி சமூக நீதி கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. அதில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “அனிதாவின் அண்ணனாகவே நான் பேசுகிறேன். மற்ற மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராட வேண்டும். ஒன்றிய அரசு கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயல்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை, கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது.

உதயநிதி – ஸ்டாலின்

நீட் என்பது ஒரு ஏமாற்று வேலை. கலைஞர், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த அடிமை அ.தி.மு.க அரசு பா.ஜ.க-வின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வை நுழைத்தது. நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது ஏழு கோடி தமிழ் மக்களின் உத்தரவை அவமதிக்கும் செயல். ஆளுநர் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம். எளிய மக்களின் கல்விக்காக நான் குரல் கொடுப்பேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ஆளுநர் ஒரு போஸ்ட்மேன்தான். நீட் மசோதாவை அனுப்புவதுதான் அவர் வேலை என்ற முதலமைச்சரின் எச்சரிக்கைக்கு ஆளுநர் செவிமடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.